Wednesday, August 26, 2026

புறாக்கள்

காக்கைக்குச்சோறு

வைத்தால் புறாக்களே

பறந்துவந்து உண்கின்றன

முன்னோர்கள்

புதுவடிவத்தில்

வரக்கூடாதா என்ன?

கனவுக்கல்லூரி

கனவு பலன்

கற்றுக்கொடுப்பதற்கு

புதிதாக ஒரு கல்லூரி

திறக்கப்படுகிறது.

அதில் பல்லி ஜோசியம்,

பில்லிசூன்யம்,

சகுனம் பார்த்தல்

விருப்பப்பாடங்கள்.

படிப்பு முடித்தவுடன் 

அரசுப்பணி உறுதி.

இல்லம் தேடி

மருத்துவத்தின்கீழ்

இவர்கள் மக்கள்பிணித்தீர்ப்பர் 

என்று நம்பத்தகுந்த

வட்டாரங்கள்

தெரிவிக்கின்றன.




அம்மா

காலையில் எழுந்ததும்

மனதும் விழித்துக்கொள்கிறது

முகம் கழுவும்போது

தண்ணீரில்லாமல்

தத்தளித்த கோடையை

தேவையில்லாமல்

நினைக்கிறது 

இந்நேரத்துக் குளிர்ச்சியை

கசக்கவைக்கிறது

அம்மாவும் இப்படித்தான்

சந்தோஷமாக இருக்கும்போது

கஷ்டத்தை நினைவூட்டுவார்கள்

இறந்த முதல் குழந்தைக்காக

துக்கத்தின் உடை தரித்தார்கள்

இடரையே எதிர்பார்த்தார்கள்

கசப்பையே குடித்தார்கள்

இனிப்பின் சுவை மறந்தார்கள்

எதிர்மறை எண்ணங்கள்

வரும்பொழுது

அம்மாவின் இருண்ட

பாதை தொட்டு

பதறித்திரும்புவேன்.





Tuesday, August 25, 2026

காலை

நான் தூங்காமல்

விழித்திருந்தபோது

காலை நீலமாகப்பூத்தது.

சூரியனுக்கு முன்

எழுபவர்கள்

தினமும் அப்படித்தான்

என்கிறார்கள்.

அப்படித்தானா என

மறுபடியும் அப்படி

விழிக்கும்போது

பார்க்கவேண்டும்.

மழை

மழை என்னை

வீடுவரை கொண்டு விட்டுவிட்டு 

நான் மீண்டும் அதை

வெளியே வந்து

பார்த்து விடை

கொடுக்கும் வரை

பெய்து கொண்டேயிருந்தது.

நகரத்தில் பருவம்

பொய்க்காதவரை

வாழ்க்கையில்

நம்பிக்கை பட்டுப்போகாது.


மழையைவிட்டுப்பிரிய

மனமில்லாமல்

இனிப்பற்ற

காஃபியைப்

பருகிக்கொண்டே

சாளரக்கண்ணாடி

வழியே தூறலை

வேடிக்கைப்பார்த்துக்

கொண்டிருந்தேன்

நகரத்தின் வசந்த

காலம் இதுதான் போலும்

கண்ணீரின் நிறமுற்ற

பூக்கள் பொழியும்

தண்ணீர் மாதங்கள்.



கூடு

மதிய வேளையில்

விடாது கூவிய

குயில் சட்டென்று

அமைதியானது

காதல் கைகூடிவிட்டால்

கூக்குரலிடுவதற்கு

என்ன தேவை?

இனி முட்டையிடுவதற்கு

காக்கை கூடு மட்டும்தான்

தேடவேண்டும்

அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்!



பசி

மருத்துவர்களினால்

உணவுகள் விலக்கப்படும்

போதுதான்

அதையெல்லாம்

இன்னும் சுவைத்திருக்கலாமோ

என்று தோன்றுகிறது.

பசிமறந்து உழைத்த

நாட்கள் நினைவுக்கு

வருகின்றன.

இப்பொழுது அதுபோல்

இருக்கமுடியாது.

உடல் சாமியாடிவிடும்.

இப்பொழுது கையேந்துபவர்களின்

நிலையறிந்து 

கை தானே கொடுக்கிறது.

உழைத்துச்சாப்பிடு

என்று வலியுறுத்துவதில்லை.